Saturday, 16 May 2015

செம்பியன் - சிறுபாணாற்றுப்படை

நத்தத்தனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது சிறுபாணாற்றுப்படை எனும் இந்நூல். இது 269 அடிகளாலமைந்தது. ஒய்மான் நாட்டு மன்னனான நல்லியக்கோடன் என்பவனைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல், அம்மன்னனிடம் பரிசு பெற்ற சிறுபாணன் ஒருவன் தான் வழியிற் கண்ட இன்னொரு பாணனை அவனிடம் வழிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

சோழநாட்டின் பெருமை
நறு நீர்ப் பொய்கை அடை கரை நிவந்த
துறு நீர்க் கடம்பின் துணை ஆர் கோதை
ஓவத்து அன்ன உண் துறை மருங்கில்
கோவத்து அன்ன கொங்கு சேர்பு உறைத்தலின் [68-71]
வருமுலை அன்ன வண்முகை உடைந்து
திருமுகம் அவிழ்ந்த தெய்வத் தாமரை
ஆசு இல் அங்கை அரக்குத் தோய்ந்தன்ன
சேயிதழ் பொதிந்த செம் பொற்கொட்டை
ஏம இன் துணை தழீஇ இறகு உளர்ந்து
காமரு தும்பி காமரம் செப்பும். (72-77)

தண் பணை தழீஇய தளரா இருக்கை
குணபுலம் காவலர் மருமான் ஒன்னார்
ஓங்கு எயில் கதவம் உருமுச்சுவல் சொறியும்
தூங்கு எயில் எறிந்த தொடி விளங்கு தடக்கை
நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பியன்

ஓடாப் புட்கை உறந்தையும் வறிதே அதாஅன்று (78-83)


குளிர்ச்சியான மருத நிலத்தைச் சார்ந்த சோர்வில்லாத (உழைப்பிலே ஈடுபட்டிருக்கும் மக்களைக் கொண்ட) ஊர்கள் விளங்கும் கிழக்குத் திசை நாட்டைக் காத்து வருபவன். சோழ மன்னர்களின் வழித்தோன்றல். இவன் நாட்டுக் குதிரைகள், பகைவர் நாட்டு உயர்ந்த மதிற்சுவரின் கதவுகளில், தனது கழுத்து மயிரை இடிமுழக்கம் போன்று தேய்க்கும். மன்னனோ பகைவர்களின் தூங்கு எயிலை அழித்த பெருமையினைப் பெற்ற சோழர் குலத்தில் தோன்றியவன். தொடி அணிந்த கைகளை உடையவன். இத்தகைய மன்னன் ஆட்சி செய்கின்ற சோழ நாட்டைவிட்டுக் குடிமக்கள் பெயராமல் மனஉறுதியோடு இருப்பதற்குக் காரணமான உறந்தை என்ற ஊரில் நீ பெறுகின்ற பரிசுப் பொருட்களும் குறைவானதாகவே இருக்கும் அது மட்டுமன்று.
(முன்னொரு காலத்தில் நல்லவர்களைத் துன்புறுத்தி வந்த அசுரர்களின் தொங்கும் மதிலைச் சோழ மன்னனொருவன் அழித்ததால், தூங்கெயில் எறிந்த பெருமையினைச் சோழர் குலம் பெற்றது என்பர்.  தூங்குஎயில் மூன்றெறிந்த சோழன் (சிலம்பு 5 ; 29) ஒன்னார் உட்கும் கடுந்திறல் தூங்கெயில் எறிந்த நின் ஊங்கணோர் (புறம் 39, 5-6) என்பன போன்ற இலக்கிய வரிகளாலும் இச்செய்தியினை அறியலாம்)

No comments:

Post a Comment