Wednesday, 9 April 2014

தலைமகன் பாங்கற்கு உரைத்தது. - குறுந்தொகை

காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக் 
கடுதலும் தணிதலும் இன்றே யானை
குளகு மென்று ஆள்பதம் போலப் 
பாணியும் உடைத்து, அது காணுநர்ப பெறினே.

-மிளைப்பெருங்கந்தன்
குறுந்தொகை 136
தலைமகன் பாங்கற்கு உரைத்தது.

(காமத்தின் இழிவினைக் கூறி இடித்துரைத்த நண்பனிடம் காமத்தின் உயர்வைத் தலைவன் எடுத்துரைப்பதாக இப்பாடல் அமைகிறது)

காமத்தை, உலகினர் காமம் காமம் என இழிவாகக் கூறுகின்றனர்.
காமம் என்பது புறத்தே நின்று தாக்கும் தெய்வமும் அன்று.
உடலை மெலிவிக்கும் நோயும் அன்று.
காமமானது பேயும் நோயும் போல காணப்படாததாய் சிறுகிப் பெருத்தலும், பெருகிச் சிறுத்தலும் உடையதன்று.
யானையானது, அதிமதுரத் தழையை மென்று தின்று அதனால் உண்டாகிய மதத்தைப் போலத் தாம் காணுநரைத் தமக்கு உரியராகப் பெற்றால், காமம் பெருகி நீண்ட காலம் நிற்கும் இயல்புடையது.


காமம் கிழப்பசுவுக்கு விருந்தாற்றும் இளம்புல் போலன்றி,
களிற்று யானைக்கு மதம் பெருக்கும் அதிமதுரத்தழை போன்றது எனத் தலைவன் பாங்கனுக்குக் காமத்தின் வலிமையை உணர்த்தினான்.

குறுந்தொகை - பாலை

கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது, 
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கா அங்கு,
எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது,
பசலை உணீஇயர் வேண்டும்-
திதலை அல்குல் என் மாமைக் கவினே.



“இப்படி கன்றும் உண்ணாது கலத்திலும் படாத இந்தப் பாலைப் போன்றதே என் அழகும் இளமையும். என் அழகை அனுபவிக்க வேண்டிய தலைவன் இங்கு இல்லை. அவன் வரும் வரை இந்த அழகையும் இளமையையும் இப்படியே நிறுத்தி வைக்கவும் என்னால் இயலாது.
 
ஆதலால் வீணாக வழிந்தோடும் பாலை வெற்று நிலம் பருகுவது போல் எனக்கும் ஆகாது என்னவனுக்கும் உதவாத இந்த அழகை பசலை நோய் பருகிக் கொண்டிருக்கிறது.”

நன்னூல் - நூற்பா 135 / 136

செம்மை சிறுமை சேய்மை தீமை
வெம்மை புதுமை மென்மை மேன்மை
திண்மை யுண்மை நுண்மை யிவற்றெதிர்
இன்னவும் பண்பிற் பகாநிலைப் பதமே. (08)

ஈறு போதல் இடையுகர மிய்யாதல்
ஆதி நீட லடியகர மையாதல்
தன்னொற் றிரட்டன் முன்னின்ற மெய்திரிதல்
இனமிக லினையவும் பண்பிற் கியல்பே. (09)




அகப்பொருள் - தொல்காப்பியர்

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே.


பாலையில் முல்லை

பகலவன் பிறந்த பாலை - தன்
பாதம் தவள்ந்து பயின்ற நன்பாலை
பஞ்சுரம் வீசும் பாலை - பாலை
யாழினை மீட்டி இசைத்திடும் பாலை

விழி ஒளி முடிவினில் மணல் வழி கண்டு
மழை வழி முகிலும் மறைவது உண்டு
விரல் உயர் அரும்பின் வழை புகு வேரும்
குழலொலி தொலைவினில் நீரினை தேடும்
ஒட்டி பிறந்த உகிர் சதை போல
பாலையும் அனலும் பிரிந்திடா வாழும்
கதிர் ஒளி பட்டு நிலம் தணலாக
காணலின் நீரால் புள்ளினம் வாடும்

மண்ணின் பற்றால் மணிமுடி வேந்தன்
செருப்பறை முழங்கி பாலை பாசறையாக
அம்பிறை மழையால் நனைந்த நன்னிலமே
வெண்பிறை குளிரால் தணிவாய் எனவே
புண்மெய்யுடனே வேண்டினான் வீரன்
சுற்றம் மறந்து பெற்றவர் மறந்து
பெற்ற தன் கடனை புரிந்தான் பகலினில்
உற்றாள் நினைவை நொடியிலும் இழந்திலன்
பற்றிய கையில் வாளினை கொடுத்து
நெற்றியிலே வெற்றி திலகமும் இட்டு
கட்டி தழுவி முத்தமும் தந்தாள்
போர்க்களம் அதிலே தன் நினைவலை மோத
உள்ளம் பிரியாது ஒரு நிலையினில் இராது
கண்கள் இமையாது இரு கரங்களும் நீங்காது
இதழால் மொழியது நெஞ்சதீ அணையாது
மீண்டும் சேரவேண்டும் வெற்றி களிப்புடனே
என வாசல் பார்த்து வான்குறி பார்த்து
விடைபெற்று வந்தான் நடை சற்றும் மாறா
பொற்களம்  அதை கடக்கையில் களவியல் எண்ணி
உளநிறைவின்றி உதிரம் பொழிந்தான்

விண்ணில் காணும் நிலவதுவே - காண
வட்ட்டென பொட்டென சுட்டிய சேய்க்கு
பெண்ணென கண்ணென கவியின் வரிக்கு
இக்தோர் கோளென பிரிந்தோர் காதலற்கு
வீரன் விண் பார்த்து வேண்டி நிற்க
அன்னிலவை முன்பார்த்து ஏங்கி நின்றாள்
ஓங்கிய மரத்தை தாங்கிய நிலத்தில்
வீற்றிருந்தாள் ஒருத்தி காத்திருந்தாள் ஒருவனுக்கு
கற்களை வீசிக்கொண்டு

அவள் சில்வண்டு மொய்க்கா சிறு மலர்
பொன்வண்ணம் மாறா புது மலர்
மொட்டுவிட்ட மலர்களிலே மொய்க்கும் வண்டு
தன் விழியை முத்தமிட திட்டமிட்டு வட்டமிட
மூடிக்கொள்வாய் மேலிமையை  என
மூங்கில் பதற்காட்டில் மோதும் பனிக்காற்று
மெல்லியதாய் வீசியது

நிலமகள் மடியினில் வேரின்றி பிறந்தாய்
மழையின் நீரால் தாகம் தணிந்தாய்
சூரிய ஒளியால் வீரியம் பெற்றாய்
விசும்பின் வழியாய் என்னையே நினைத்து
காற்றுடன் அசைந்து படர்ந்தாய் முல்லையே
இவ்வேநிர் வேளையில் விலகி ஏன் நின்றாயோ


தளிர்ந்த என் மேனியை தாங்கும் மரமே
ஆயுள் முழுவதும் பற்றுதல் வரமே
என் உயிர் காத்த தன்னெழில் தலைவி
துணைவனை பிரிந்திங்கு வாழும் போது
தழுவுதல் கண்டால் தாங்குமோ தன்மனமே
இப்பாலையின் பிரிவினை யானும் கொண்டேனே

எனபாலையை முல்லை பகிர் வதும் உண்டு



Wednesday, 2 April 2014

வீழ்வே னென்று நினைத் தாயோ?

தேடிச் சோறு நிதந் தின்று - பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி - பிறர்

வாடப் பல செயல்கள் செய்து -மனம்

வாடித் துன்ப மிக உழன்று - நரை

கூடிக் கிழப் பருவ மெய்திக் - கொடுங்

கூற்றுக் கிரையெனப் பின் மாயும் - பல

வேடிக்கை மனிதரைப் போலே - நான்

வீழ்வே னென்று நினைத் தாயோ?

- மகாகவி சுப்ரமணிய பாரதி