Wednesday, 9 April 2014

தலைமகன் பாங்கற்கு உரைத்தது. - குறுந்தொகை

காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக் 
கடுதலும் தணிதலும் இன்றே யானை
குளகு மென்று ஆள்பதம் போலப் 
பாணியும் உடைத்து, அது காணுநர்ப பெறினே.

-மிளைப்பெருங்கந்தன்
குறுந்தொகை 136
தலைமகன் பாங்கற்கு உரைத்தது.

(காமத்தின் இழிவினைக் கூறி இடித்துரைத்த நண்பனிடம் காமத்தின் உயர்வைத் தலைவன் எடுத்துரைப்பதாக இப்பாடல் அமைகிறது)

காமத்தை, உலகினர் காமம் காமம் என இழிவாகக் கூறுகின்றனர்.
காமம் என்பது புறத்தே நின்று தாக்கும் தெய்வமும் அன்று.
உடலை மெலிவிக்கும் நோயும் அன்று.
காமமானது பேயும் நோயும் போல காணப்படாததாய் சிறுகிப் பெருத்தலும், பெருகிச் சிறுத்தலும் உடையதன்று.
யானையானது, அதிமதுரத் தழையை மென்று தின்று அதனால் உண்டாகிய மதத்தைப் போலத் தாம் காணுநரைத் தமக்கு உரியராகப் பெற்றால், காமம் பெருகி நீண்ட காலம் நிற்கும் இயல்புடையது.


காமம் கிழப்பசுவுக்கு விருந்தாற்றும் இளம்புல் போலன்றி,
களிற்று யானைக்கு மதம் பெருக்கும் அதிமதுரத்தழை போன்றது எனத் தலைவன் பாங்கனுக்குக் காமத்தின் வலிமையை உணர்த்தினான்.

No comments:

Post a Comment